தொட்டில் குழந்தைத் திட்டம்-ரத்து செய்ய கோரி வழக்கு
சென்னை: கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொட்டில் குழந்தைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெண் சிசுக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றான தர்மபுரியைச் சேர்ந்த அமைப்பு ஒன்றுதான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து தர்மபுரியைச் சேர்ந்த வளர்ச்சிக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சொசைட்டி என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன்தான் வளர வேண்டும், தாய்ப்பால் குடித்துதான் வளர வேண்டும், தனது சுற்றத்தாருடன்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாக இந்தத் திட்டம் உள்ளது.
தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் மட்டும் 1166 குழந்தைகள் விடப்பட்டுள்ளன. 1997ம் ஆண்டு மாதந்தோறும் தர்மபுரி மாவட்டத்தில் 105 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டு வந்தன.
தொட்டில் குழந்தைகள் திட்டம் நல்லெண்ணத்துடன்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை அது மீறுவதாக உள்ளது.
குழந்தைகளை வெறுக்கும் மக்களின் மனதை இந்தத் திட்டம் மாற்றத் தவறி விட்டது. மாறாக, பெண் சிசுக்களை புறக்கணிக்கும் நிலைக்கு மக்கள் மாறி விட்டனர்.
இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டு மாற்றுத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இந்தத் திட்டம் தொடர்ந்தால், தர்மபுரி பகுதியில் பாலின சம நிலை மாறி விடும். மேலும் பல்வேறு தொடர் பிரச்சினைகளும் ஏற்படக் கூடும்.
பெண் சிசுக் கொலைக்கு தொட்டில் குழந்தைகள் திட்டம் நல்ல தீர்வல்ல. எனவே இதை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் முருகேசன், வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுகுறித்து விரிவான விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1992ம் ஆண்டு அறிமுகமான தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்படி, பெண் சிசுக்களை விரும்பாதோர் அதைக் கொல்வதற்குப் பதில் அரசு வைக்கும் தொட்டில்களில் போடலாம்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறார் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் அரசு சார்பில் தொட்டில்கள் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications