சட்டசபையிலிருந்து பாமகவினர் வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று பாமக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற பட்டியலை வாசித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை மீதான விவாதத்தில் அதைப் பற்றி பேசாமல் ஒவ்வொருவரும் ஜாதியை பற்றி பேசினால் அது நன்றாக இருக்காது.
முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து 1 நாள் விவாதம் நடத்தலாம். இதற்கு பாமகவினர் தயாராக இருந்தால் ஒரு தேதியை சொல்லட்டும். டாக்டர் ராமதாஸ் அனுப்பிய நன்றி கடிதம் குவியல் குவியலாக என்னிடம் உள்ளது. அவற்றை வைத்து விவாதிக்கலாம்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: தகுதி உள்ளவர்கள் இருந்தால் அந்தந்த துறைக்கு நியமித்து இருப்பார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): ஒவ்வொரு ஜாதியைப் பற்றி பேசினால் அது ஜனநாயகமாக இருக்காது.
அப்போது பாமக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று ஜி.கே. மணியை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, பாமகவினர் அவையை நடத்த விடக்கூடாது என்று திட்டமிட்டு வந்து இருக்கிறார்கள். எனவே அவர்களை சபாநாயகர் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அமருமாறு சபாநாயகர் எச்சரித்ததும் பாமக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் எழுப்பியபடி இருந்ததால் அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications