புகார் வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ-4 போலீசார் சஸ்பெண்ட்
மதுரை: மதுரையில் புகார் வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ. உள்ளி்ட்ட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து இரு தினங்களுக்கு முன் ஒரு வாடகை காரில் தனது குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.
அவர்கள் மதுரை ரிங் ரோடு கருவேலம்பட்டி விலக்கு அருகே வந்தபோது, போலீஸ் உடையணிந்த மூன்று பேரும், சாதாரண உடையில் ஒருவரும் காரை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் திடீரென கார் டிரைவரை தாக்கினர். கத்தியைக் காட்டி பெண்கள் அணிந்திருந்த 31 சவரன் தங்க நகை உட்பட ரூ. 9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். காரையும் பறித்துக் கொண்டு, தலைமறைவாகி விட்டனர்.
கொள்ளையர்களிடம் தப்பிய தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் திருமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து எஸ்ஐ பிரியா, ஏட்டு அய்யாபொண்ணு, போலீசார் தங்கபாண்டி, ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் சம்பவ இடம் எங்கள் பகுதிக்குள் வராது என கூறி திருநகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கால தாமதம் காரணமாக தான் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
இதையடுத்து புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ பிரியா உட்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications