பிரபாகரன் பலி: இலங்கை உறுதிப்படுத்தவில்லை-இந்தியா
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணத்தை இலங்கை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அந்தத் தகவலுக்காக இந்தியா காத்திருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியா கோரியுள்ளது. ஆனால் இதுவரை இலங்கை அரசு அதுகுறித்து எதுவும் பேசாமல் உள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துமாறு (மரணச் சான்றிதழ்களைத் தருவதன் மூலம்) இலங்கை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதுதொடர்பான இலங்கை அரசின் முறையான பதிலுக்காக இந்தியா காத்திருக்கிறது என்றார் கிருஷ்ணா.
கடந்த மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைத் தொடர்பு கொண்டு அத்தகவல் உண்மையானதுதானா என்பது குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து நாராயணன், மேனன் குழு இலங்கை சென்றது. ராஜீவ் காந்தி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர பிரபாகரன் மரணச் சான்றிதழைத் தருமாறு அந்த இருவரும் ராஜபக்சேவிடம் கோரிக்கை வைத்து விட்டு வந்தனர்.
ஆனால் இதுவரை இலங்கை அரசு அதுகுறித்து எந்தப் பதிலையும் அளிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு கேள்விக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளிக்கையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களும் விரைவில் மறு வாழ்வு பெற வேண்டும் என இந்தியா ஆர்வமாக உள்ளது. இதன் முகமாகவே ரூ. 500 கோடி நிதியுதவியை இந்தியா அறிவித்துள்ளது.
இவை தவிர கொட்டகைகள் அமைக்க 2600 டன் ஸ்டீல் ஷீட்டுகள் அனுப்பப்படவுள்ளது.
கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழிக்கும் நான்கு நிபுணர் குழு அனுப்பப்படவுள்ளது.
மேலும், தமிழகத்திலிருந்து விரைவில் பல்வேறு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளன.
இலங்கைப் பிரச்சினைக்கு சுமூகமான அரசியல் தீர்வே நிரந்தர வழியாகும். அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும்படியான தீர்வு காணப்பட வேண்டும்.
தற்போது அங்கு ராணுவ நடவடிக்கைகள் முடிந்திருப்பதால் நீடித்த தீர்வுக்கு வழி காணப்பட வேண்டும் என்றார் கிருஷ்ணா.