பெண்ணுக்கு கத்திக் குத்து-வாலிபருக்கு வெட்டு
மதுரை: மதுரை திடீர் நகரில் சிறார்களுக்கு இடையே நடந்த சிறு சண்டை பெரும் மோதலாக மாறியதில், ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டார். அவரைக் குத்திய நபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திடீர் நகரில் வசித்து வருபவர் மதுரைவீரன். இவரது மனைவி சந்திரா. இவர்களின் மகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகனுக்கும் சில தினங்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டது.
இதுதொடர்பாக இருவரின் பெற்றோர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று செந்தில் கத்தியால் சந்திராவை குத்தினார்.
வேதனையில் அலறிய அவரது சத்தம் கேட்டு அவரது கணவர் மதுரைவீரன், உறவினர் செல்லக்குமார், மதன், சந்தோஷ், முத்து, ராஜா ஆகியோர் ஓடி வந்தனர்.
செந்திலை மடக்கி பிடித்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிய செந்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்.
படுகாயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் போலீஸாரிடம் இரு தரப்பும் புகார் கொடுத்தது. அதன் பேரில் போலீஸார் இருவரது புகார்களையும் பதிவு செய்து 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவிக்கு மிரட்டல்-ராணுவ வீரர் மீது வழக்கு
இதற்கிடையே, மனைவியைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிய ராணுவ வீரர் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோழவந்தான் சாலையில் வசித்து வருபவர் நாகேந்திர கண்ணன். ராணுவத்தில் சேவையாற்றுகிறார். இவருக்கு உமா மகேஷ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் கண்ணன் மனைவியை சித்திரவதை செய்வாராம். அடித்து உதைப்பாராம். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
இதையடுத்து திருமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார் உமா மகேஷ்வரி. இதையடுத்து போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications