திருச்சியில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் பலி
திருச்சி: திருச்சியில் பாய்லர் வெடித்ததில் 3 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
செந்தண்ணீர்புரத்தில் திருச்சி டிஸ்டில்லரீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற எரிசாராய ஆலை உள்ளது.
இந்த ஆலையில் உள்ள ஒரு பிரிவு 8 மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்தது. அதை சரிசெய்யும் பொறுப்பை ஆலை நிர்வாகம் துவாக்குடியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இந் நிலையில் நேற்று தொழிலாளர்கள் சரவணன், ராஜேஷ், ஜான் கென்னடி, சலீம், செந்தில்குமார், செல்வகுமார், அய்யப்பன் ஆகியோர் இந்த ரிப்பேர் வேலைகளில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த ஒரு பாய்லருக்குள் இறங்கி 3 பேர் வெல்டிக் செய்ய முயன்றபோது அது பயங்கரமாக வெடித்துச் சிதறியது. அந்த பாய்லருக்குள் கேஸ் இருந்தது தெரியாமல் வெல்டிங் கருவியை இயக்கியபோது அந்த வாயு வெடித்து சிதறியுள்ளது.
இதில் சரவணன், ராஜேஷ், ஜான்கென்னடி மூவரும் உடல் சிதறி பலியாயினர். அவர்களது உடல் உறுப்புக்கள் கரிக்கட்டைகளாரிவிட்டன.
சலீம், செந்தில்குமார், செல்வகுமார் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. அய்யப்பன் தொலைவில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.
பலியான ஒருவரது உடல் 150 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டிருந்தது. தலை துண்டாகி கிடந்த அந்த உடலில் ஒரு கை, ஒரு கால் மட்டுமே இருந்தது. மற்றொரு கை, கால், தலை ஆகியவற்றைக் காணவில்லை.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.