கள்ளச்சாராயா சாவு - மோடி அரசுக்கும், மல்லையாகவுக்கும் மோதல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச்சாராயத்திற்கு 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, குஜராத் அரசின் மது விலக்குக் கொள்கையை சாடினார்.
இதுகுறித்து மல்லையா கூறுகையில், மது விலக்குக் கொள்கை, குஜராத்தில் தோல்வி அடைந்து விட்டது. அங்கு கள்ளச்சாராயம் பெருகி விட்டது. இதுவே இப்போது அகமதாபாத்தில் 120 பேரின உயிரைக் குடிக்க முக்கிய காரணம்.
மது விலக்கு என்பதை அமல்படுத்த முடியாது என்பதை இப்போதாவது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மது விற்பனையைத் தடை செய்தால், கள்ளச்சாராயம், விஷச் சாராயம்தான் பெருகும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்று கூறியிருந்தார் மல்லையா.
இந்த நிலையில் மல்லையா பேச்சுக்கு குஜராத் அரசு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் அரசு செய்தித் தொடர்பாளர் ஜெய நாராயணன் வியாஸ் கூறுகையில், விஜய் மல்லையா தனது மது தொழிலை மட்டும் கவனித்தால் போதுமானது. பாதிக்கப்படும் ஏழைகளுக்காக அவர் கவலைப்படத் தேவையில்லை. காரணம், அவருக்கு முதலில் ஏழைகள் மீது எந்த அக்கறையும் கிடையாது.
குஜராத் அரசின் செயல்பாடுகளில் தலையிட அவருக்கு உரிமை கிடையாது. மல்லையா பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மது விலக்குக் கொள்கையை அமல்படுத்தாத கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கள்ளச்சாராயத்திற்கு குஜராத்தை விட அதிகம் பேர் பலியாகியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாட்டிலேயே மது விற்பனை மற்றும் மது குடிப்பதை முழுமையாக தடை செய்துள்ள ஒரே மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்த்கது. ஆனால் கள்ளச்சாராய கும்பல்கள் அங்கு ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கும்பலால்தான் அகமதாபாத்தில், 120 பேர் உயிரை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications