கனரா வங்கியில் ரூ. 13 கோடி மோசடி செய்த இருவர் கைது
கோவை: கோவையில், கனரா வங்கியில் ரூ. 13 கோடி மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் கனரா வங்கி முன்னாள் முது நிலை மேலாளர் ஆகியோரை, சி.பி.ஐ கைது செய்தது.
கோவையில் மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் கட்டுமான நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் 272 வீடுகள் கட்டுவதாகக் கூறி, கவுண்டம் பாளையத்திலுள்ள கனரா வங்கி கிளையில் கடந்த 2004 -05 ல் ரூ 13 கோடி கடனாக பெற்றது.
ஆனால், கடன் தொகையை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இருப்பினும் இந்த நிறுவனத்திற்கு மேலும் கடன் வழங்க வங்கி நிர்வாகம் சார்பில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான புகார்கள் சி.பி.ஐ. (ஊழல் தடுப்பு பிரிவு) க்கு சென்ற வண்ணம் இருந்தது.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் போது போலி ஆவணங்களின் அடிப்படையில், மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் சண்முகம், மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் நிறுவன மேலாண் இயக்குனர் குமரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்த பின்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.