சென்னைப் புறநகர்களுக்கும் விரைவில் வால்வோ பஸ்கள் அறிமுகம் - கே.என்.நேரு
சென்னை: சென்னை நகரில் இயக்கப்படுவதைப் போலவே, புறநகர்ப் பகுதிகளுக்கும் வால்வோ சொகுசுப் பேருந்துகள் அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில்,
சென்னை நகரில் தாழ்தள சொகுசு பேருந்து என்ற பெயரில் வால்வோ பஸ்கள் விடப்பட்டுள்ளன. ஒருநாள் இந்த பஸ் ஓட வேண்டுமென்றால் ரூ.15 ஆயிரம் வசூலாக வேண்டும். இந்தப் பஸ்களில் சராசரியாக 10 ஆயிரம் வசூல் ஆகிறது. அதே சமயம், பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு நாள் ஒன்றுக்கு விளம்பர கட்டணமாக ரூ.4,800 பெறப்படுகிறது. எனவே வால்வோ பஸ்கள் இயக்குவதில் பிரச்சினை இல்லை.
காஞ்சீபுரத்துக்கு வால்வோ பஸ் விடப்பட்டது. அதில் நல்ல வசூல் கிடைக்கிறது. இந்த ஆண்டு புதிதாக 100 வால்வோ பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
எனவே சென்னை புறநகர் பகுதிகளுக்கும் வால்வோ பஸ்கள் விடுவதில் பிரச்சினை இல்லை. கண்டிப்பாக விடப்படும் என்றார்.