கருணாநிதி கோரிக்கை ஏற்பு - பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு
கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.20-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.30 வீதமும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்தது.
இந்த விவகாரம் சட்டசபையி்ல் எதிரொலித்தது. இதுதொடர்பாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், 22-ந் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதுவரை பால் உற்பத்தியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்று தற்போது போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில்,
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசினார்கள். அவர்களுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி, பால் உற்பத்தியாளர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 22-ந் தேதி சுமூக உடன்பாடு ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்தும் விஷயத்தில் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க பொதுச் செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பால் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஆவின் நிறுவனங்களுக்கு வழக்கம் போல பால் வரத்து தொடங்கியிருப்பதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.