ஆப்கனில் இந்தியர்கள் தலிபான் தாக்குதலில் கொல்லப்படவில்லை- வெளியுறவுத்துறை
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய கட்டுமான நிறுவனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 இந்தியர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீடியாக்களில் வெளியான செய்தி முழுக்க தவறாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டான் உள்ளிட்ட சில செய்தித்தாள்கள், இணையதளங்களில், ஆப்கானிஸ்தானில் நடந்த தலிபான் தாக்குதல் குறித்த செய்தி வெளியானது.
அதில், ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் நேற்று இரவு இந்திய கட்டுமான நிறுவனம் மீது தலிபான்கள் தாக்கியதாகவும், அதில், 6 இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆப்கான் அரசு அறிவிக்கவில்லை.
ஆனால் தலிபான் அமைப்பு மட்டுமே இச்சம்பவத்தைக் கூறி வீடியோ படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக டான் டிவி தெரிவித்திருந்தது.
தாக்குதலுக்குள்ளான இந்திய கட்டுமான நிறுவனம், கோஸ்ட் மற்றும் பக்தியா மாகாணங்களில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஆப்கானிஸ்தான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இது தவறான செய்தி என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications