இந்தியா வர மன்மோகன் அழைப்பு - ஏற்றார் ஒபாமா
திட்டமிட்டபடி ஒபாமா இந்தியாவுக்கு வருவாரேயானால், அதிபராகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கு வரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் ஒபாமாவுக்குக் கிடைக்கும்.
அமெரிக்க அதிபர்களாகப் பொறுப்பேற்பவர்கள் வழக்கமாக தங்களது மிக நெருங்கிய தோழமை நாடுகள், வல்லரசு நாடுகளுக்குத்தான் ஆரம்ப கட்ட பயணங்களை மேற்கொள்வார்கள். பின்னர்தான் மற்ற நாடுகளை எட்டிப் பார்ப்பார்கள்.
இந்த நிலையில், இத்தாலியின் லா அக்யூலா நகரில் நடைபெற்ற ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாரக் ஒபாமாவை இருமுறை சந்தித்துப் பேசினார்.
நேற்று 2வது முறையாக சந்தித்துப் பேசியபோது இந்தியாவுக்கு வருமாறு ஒபாமாவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதை ஒபாமா உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
அதேபோல அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமாவும் சிங்குக்கு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் கூறுகையில், இந்தியாவுக்கு வருமாறு ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரு அழைப்புகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விரைவில் தேதிகள் முடிவு செய்யப்படும் என்றார் மேனன்.