டெல்லி மெட்ரோ பால விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆனது
டெல்லி: டெல்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே மெட்ரோ ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது திடீரென அந்தப் பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்ததில் பாலம் இடிந்து விழுந்தது.
இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ராட்சத சிமென்ட் சிலாபுக்குக் கீழ் சிக்கி நசுங்கினர். மேலும், சிமென்ட் சிலாபுகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
இந்தக் கோர விபத்தில், முதலில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மெட்ரோ தலைவர் ராஜினாமா:
இந்த நிலையில் விபத்துக்கு தான் முழுப் பொறுப்பேற்பதாகவும், இதற்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் டெல்லி மெட்ரோ ரயில் திட்ட தலைவர் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.
ஸ்ரீதரன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக டெல்லி விபத்து அமைந்து விட்டது.