இலங்கை கூட்டுப் படைத் தளபதியாக பொன்சேகா நியமனம்
கொழும்பு: இலங்கை ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்து வந்த சரத் பொன்சேகா, இலங்கை கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைப் படைகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதால் பொன்சேகாவுக்கு இந்தப் புதிய பதவி உயர்வை வழங்கியுள்ளார் ராஜபக்சே.
இலங்கையின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இனி பொன்சேகா செயல்படுவார்.
மேலும் ராணுவம், கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவத் தளபதியாக ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதியாக திசரா சமரசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி...
புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
அப்பொறுப்பில் இதுவரை கடற்படைத் தலைமைத் தளபதியாக இருந்து வந்த வசந்த் கரன்னகொடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் பொன்சேகாவை அந்தப் பொறுப்பில் அமர்த்திய ராஜபக்சே, கரன்னகொடாவை சமரசப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அவரை நியமித்துள்ளார்.
வருகிற 15ம் தேதி முதல் இந்தப் பதவி நியமனங்கள் அமலுக்கு வருகிறதாம்.