நடுக் கடலில் தத்தளித்த 5 இலங்கை மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி: நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு காப்பாற்றினர்.
இந்திய கடலோர காவல்படையின் தூத்துக்குடி கட்டுபாட்டு மையத்துக்கு இலங்கை ஹை கமிஷனிலிருந்து தொடர்பு கொண்ட அதிகாரிகள் தங்கள் நாட்டு மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாகவும் அவர்களை காப்பாற்றுமாறும் கேட்டு கொண்டனர்.
இதையடுத்து தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து கொச்சி புறப்பட தயாராக இருந்த ஐசிஜிஎஸ் சமர் என்ற ரோந்து கப்பலில் கமாண்டர் சந்திரா தலைமையிலான கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மீட்பு பணிக்காக புறப்பட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து வடகிழக்கில் 68 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு மீன்பிடி படகு தத்தளித்தவாறு மிதந்து கொண்டிருந்தது.
மேலும் அங்கு கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருந்ததாலும், அவர்களின் படகு பழுதடைந்து நின்று விட்டதாலும் அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
கடலோரக் காவல் படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர். மேலும் அவர்களை படகுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நேற்று இரவு தூத்துககுடி தெர்மல் நகர் போலீசில் ஓப்படைத்தனர்.
இன்று அந்த 5 மீனவர்களும் கலெக்டர் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.