இனி சலுகை கிடையாது... பொருளாதாரம் தன் போக்கில் சீரடையும்! - ஒபாமா அறிவிப்பு

பொருளாதார மந்தத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, தொழில் துறை மற்றும் நிதித் துறை நிறுவனங்களைக் கரையேற்ற முன்பு 787 பில்லியன் டாலர் கடனுதவித் திட்டத்தை அறிவித்தது. ஆனால் இந்த நிதி உதவியை அறிவித்த பிறகு ஒபாமா எதிர்பார்த்த பொருளாதார மீட்சி பெருமளவு நடக்கவில்லை. மாறாக வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டே அமெரிக்கப் பொருளாதாரம் 'நிமிர்ந்து விடும்' என எதிர்பார்த்தது ஒபாமா நிர்வாகம். ஆனால் அடுத்த ஆண்டும் தேக்க நிலை தொடரும் என்று அமெரிக்க மத்திய வங்கியும், பொருளாதார அறிஞர்களும் அறிவித்துள்ளது இன்னொரு அதிர்ச்சி.
இந்த நிலையில் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த மேலும் பல பில்லியன் டாலர்களுக்கு ஒபாமா நிர்வாகம் நிதிச் சலுகை மற்றும் கடன் உதவிகளை வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.
ரேடியோ மற்றும் இணையதளங்களுக்கு நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் ஒபாமா கூறியிருப்பதாவது:
"இனி நிதி உதவி எதையும் செய்யும் திட்டமில்லை. வேலையின்மை பிரச்சினை சீராக இன்னும் சில காலமாகும் என்று தெரிகிறது. இனி பொருளாதாரம் தன் பாதையிலேயே சென்று தக்க தருணத்தில் சீராகும்.
இதுபோன்ற பொருளாதார மந்த சூழலில், பொருளாதாரத்தை அதன் இயல்பிலேயே விட்டுவிடுவதுதான் சிறந்தது. நாமாக எடுக்கும் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் வந்துவிடாது...", என்றார் ஒபாமா.












Click it and Unblock the Notifications