டெல்லி மெட்ரோவில் இன்றும் விபத்து: 3 கிரேன்கள் உடைந்து 4 பேர் காயம்
டெல்லி: 6 பேரைப் பலி கொண்ட டெல்லி மெட்ரோ பால விபத்து நடந்த அதே இடத்தில் இன்று 3 கிரேன்கள் உடைந்து விழுந்தன. இதில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர்.
நேற்று விபத்து நடந்த இடத்திலிருந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்த கிரேன்கள் விபத்தில் சிக்கியுள்ளன.
உடைந்த பாலத்தின் சிதிலமடைந்த பகுதியை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவை உடைந்து விழுந்தன.
இதையடுத்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.
ஒரு கிரேன் மீது இருந்த லாஞ்சர் விழுந்ததில் அருகில் இருந்த மற்ற இரு கிரேன்களும் சரிந்து விழுந்து விட்ன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லி மெட்ரோ செய்தித் தொடர்பாளர் அனூஜ் தயாள் கூறுகையில், ஒரு கிரேன் மட்டும்தான் உடைந்தது. அந்தப் பகுதியை போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கி விடாதபடி கண்காணித்து வருகின்றனர் என்றார்.