நிறைந்தது கபினி..காவிரியில் வேறு வழியின்றி நீரை திறந்த கர்நாடகம்
கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிவிட்டதையடுத்து வேறு வழியில்லாமல் நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகம். நேற்று வினாடிக்கு சுமார் 16,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால் இந்த நீர் ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டு பகுதியை நேற்று காலை தொட்டது.
இதையடுத்து இன்று பிற்பகலில் நீர் மேட்டூர் அணையை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 13,688 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இந்த நீர் வரத்து காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
இப்போது மேட்டூர் அணையில் 60 அடி நீர் உள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 120 அடியாகும். கடந்த மாதத்தில் மேட்டூருக்கு கர்நாடகம் 10.16 டிஎம்சி அடி நீரை தந்திருக்க வேண்டும். ஆனால், 6 டிஎம்சி அடி தான் நீரை வழங்கியது.
இப்போது தனது அணை நிரம்பிவிட்டதால் அதன் பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்துவிட்டுள்ளது.
இந் நிலையில் கபினிக்கு நீர் வரத்து குறைய ஆரம்பித்துள்ளதால் உடனடியாக நீர் திறப்பு அளவையும் கர்நாடகம் குறைத்துவிட்டது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி கபினியிலிருந்து இப்போது வினாடிக்கு 13,500 கன அடி நீரே திறந்துவிடப்படுகிறது.