கருணாநிதி வழக்கு-வைகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு
சென்னை: முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது இன்று எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த மே மாதம் புரசைவாக்கத்தில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,
இயக்குனர் பாரதிராஜாவிந் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே காரணம் என்று குற்றம் சாட்டனார்.
இது கருணாநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி வைகோ மீது எழும்பூர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
வைகோவிடம், உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, நான் குற்றவாளி அல்ல, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
வெளியில் வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. மதிமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. நிச்சயம் நீதியே வெல்லும் என்றார்.