முதல்வர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் - கரூர் இளைஞர் கைது
கடந்த 8-ந் தேதி அன்று சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் தகவல் ஒன்று வந்தது.
அதில், 16-ந் தேதியன்று சென்னையில் விமான நிலையம் உள்பட பல முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும் என்றும் இதே போல தமிழகத்திலும் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் என்றும், முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் தகவலில் ஜெயசீலன் என்பவர் அதை அனுப்பியதாகவும், அவரது செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெயசீலன் சேலத்தைச் சேர்ந்தவர். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், ஜெயசீலன் திரைப்பட தயாரிப்பாளர் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு வேண்டாத யாரோ ஒருவர்தான் இதை அனுப்பியிருக்க வேண்டும் என போலீஸார் தீர்மானித்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் அருகே உள்ள கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த யுவராஜ் (26) என்ற வாலிபர் பணம் கொடுக்கல்-வாங்கலில் ஜெயசீலனை செல்போனில் மிரட்டியது தெரியவந்தது. எனவே அவர்தான் இ-மெயில் அனுப்பியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து யுவராஜைப் பிடித்தனர் போலீஸார். அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார் யுவராஜ்.
இதையடுத்து அவரை சென்னைக்குக் கொண்டு வந்து வாக்குமூலம் பெற்றனர்.
தனது வாக்குமூலத்தில் யுவராஜ் கூறியிருப்பதாவது..
எனது தந்தை மகாலிங்கம் விவசாயம் செய்கிறார். தாயார் பெயர் சரசுவதி. 2 அண்ணன்கள் உள்ளனர். பி.காம். பட்டப்படிப்பு படித்துள்ள நான் தனியார் வங்கி ஒன்றில் சென்னையில் வேலை பார்த்தேன். அப்போது பட அதிபர் ஜெயசீலனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
நோக்கியா செல்போன் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக அவர் கூறினார். இதற்காக ரூ.30 ஆயிரம் பணமும் வாங்கினார். ஆனால் அவர் வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டபோது என்னை மிரட்டினார்.
இதனால் அவரை போலீசில் மாட்டி விட முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் தகவல் அனுப்பினேன். போலீசார் என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் கண்டுபிடித்து விட்டனர். ஆத்திரத்தில் செய்த தவறால் நான் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வந்து விட்டது என்று கூறியுள்ளார்.
யுவராஜ் மீது 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.