இந்தியாவை விட சீனா முக்கியமா?-ராஜபக்சே மறுப்பு
கொழும்பு: இந்தியாவை விட சீனாதான் இப்போது மிக முக்கியம் என்று நாங்கள் கருதவில்லை. அப்படி கருதவும் மாட்டோம். இரு நாடுகளுமே எங்களுக்கு உதவுகின்றன என்று கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
இதுகுறித்து டைம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுடன் இலங்கைக்கு சிறப்பான உறவு உள்ளது. இலங்கையின் கூட்டாளி நாடுகளில் தற்போது இந்தியாவை விட சீனா முக்கியமாகி விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
நான் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் யாருமே அப்படி நினைக்கவில்லை. இந்தியா எங்களது அண்டை நாடு, நண்பன்.
எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கு வளர்ச்சிக்கு நிறைய நிதி தேவை, நிறைய உதவிகள் தேவை. யாரெல்லாம் எங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களிடம் நாங்கள் போவதில் தவறில்லை.
சீனாவிடமும் போகலாம், ரஷ்யாவிடமும் போகலாம், பிரேசிலிடமும் போகலாம். எங்களுக்கு சில நாடுகள்தான் உண்மையில் உதவி செய்கின்றன.
ஜப்பான் எங்களுக்கு பெருமளவில் உதவி செய்கிறது. எங்களது வளர்ச்சியில் மிகுந்த தோழனாக இருக்கிறது ஜப்பான். இந்தியாவும் எங்களுக்கு உதவிகள் செய்கிறது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஏதும் நடக்கவில்லை. புலிகளை இரண்டை மணி நேரத்தில் ஒழித்திருக்க முடியும். ஆனால், அதில் அப்பாவி தமிழர்களும் பலியாவர் என்பதால் தான் இரண்டை ஆண்டுகள் போர் நடத்தினோம்.
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும், அவ்வளவுதான். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அக்கறையும் இல்லை. இப்போது அவர் உயிரோடு இல்லை என்பது தான் முக்கியம் என்றார் ராஜபக்சே.
மீண்டும் வரும் சந்திரிகா..
இந் நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா சில ஆண்டுகளுக்கு முன் அரசியலை விட்டே விலகி தனது பொறுப்புகளை ராஜபக்சேயிடம் ஒப்படைத்தார்.
இப்போது மீண்டும் முழு நேர அரசியலுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார் சந்திரிகா. ராஜபக்சேவுக்கு எதிராக கட்சியி்ல் ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ார்.
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி சந்திரிகா மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது. ஆனால் எம்பியாகி பிரதமர் பதவிக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications