சிங்கள மயமாக்கல் தீவிரம்- மட்டக்களப்புடன் சிங்கள கிராமங்கள் இணைப்பு
பாரம்பரிய தமிழர் பகுதிகளான திரிகோணமலை உள்ளிட்டவை இன்று சிங்கள மயமாகி விட்டன.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் நோக்கில் அரசு ஈடுபட்டு வருகிறது.
படிப்படியாக இந்த வேலையைச் செய்து வரும் இலங்கை அரசு, இதன் பொருட்டே, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு சிங்கள கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைத்துள்ளது அரசு. 18 வருடங்களுக்கு முன்பு சிங்கள மக்கள், மட்டக்களப்பு கோர்ட்டுக்குப் போவதில் சிரமம் இருப்பதாக கூறி இவற்றை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தது இலங்கை அரசு என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், மீண்டும் இக்கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் அரசு இணைத்துள்ளது.
இதன் மூலம் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, படிப்படியாக மட்டக்களப்பை சிங்கள பகுதியாக மாற்ற சிங்கள அரசு முயற்சிப்பதாக கருதப்படுகிறது.