தமிழகத்தில் தீவிரவாதிகளை தடுக்க 815 குழுக்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க 591 குழுக்களும், நக்சலைட்டுகளின் ஊடுருவலை தடுக்க 224 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் டிஜிபி கே.பி.ஜெயின் கூறினார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையமும், பொது மக்களும் பாராட்டியுள்ளனர். இங்கு ஜாதி, இன மோதல்கள் நடைபெறவில்லை. பழிவாங்கும் நோக்கில் சிறுசிறு சம்பவங்கள் மட்டும் தான் நடந்துள்ளன.
சமீபத்தில் மதுரையில் 13 எவர்சில்வர் கூஜா குண்டு கண்டுபிடிக்கப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 கை துப்பாக்கிகளும், ராமநாதபுரத்தில் 6 கை துப்பாக்கிகளும் மற்றும் 134 துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் தீவிர பாதுகாப்பு தொடர்கிறது.
தேச விரோத தீவிரவாத சக்திகள் கடல் வழியாக ஊடுருவினால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து போலீசார், கடலோர காவல் படை, இந்திய கடற்படை மற்றும் வருவாய் துறையினர் இணைந்த 'ஆப்ரேஷன் பேரிகேட்' என்ற ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை உள்ளது. 591 கடலோர கிராமங்கள் உள்ளன. தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதைத் தடுக்க இந்த அனைத்து கிராமங்களிலும் மீனவர்கள் அடங்கிய 591 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் வழியாக நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்கவும், நக்சலைட்டுகள் பற்றிய தகவலை சேரிக்கவும் 224 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
37 வருடங்களாக தலைமறைவாக இருந்த நக்சலைட்டுகள் தமிழ்வாணன், சிவலிங்கம், சாமிநாதன் மற்றும் 22 வருடமாக தலைமறைவாக இருந்த எம்.கே.கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7,000 புதிய போலீசார் தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் இவர்கள் பயிற்சி முடிந்து பணியில் சேரவுள்ளனர். மேலும் 4,000 போலீசாரை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தையும் நெட்வோர்க் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
சமீபத்தில் மின்சார ரயிலை கடத்தி விபத்து ஏற்படுத்திய நபர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. அவரை தனிப்படை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள்.
கடந்த 6 மாதத்தில் 10,827 குற்ற வழக்குகளில் 7,679 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ரவுடித்தனத்தில் ஈடுபட்ட 614 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications