புளியங்குடியில் அரியவகை ஆண் யானை திடீர் சாவு
புளியங்குடி: புளியங்குடி வனப்பகுதியில் அரியவகை கல்யான் இனத்தை சேர்ந்த 3 வயது ஆண் யானை திடீரென இறந்தது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
புளியங்குடி, சிவகிரி வனசரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இங்கு யானை, புலி, மிளா, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்கினங்கள் உள்ளன. இங்கு இந்திய ரக யானைகள் அதிகமாகவும், மக்னா வகை ஆண், பெண் யானைகள், அரிய வகையான கல்யாண் வகை யானையும் ஏராளமாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்ததை அடுத்து கேரள வனப்பகுதிக்கு சென்ற யானைக் கூட்டம் தற்போது மழை சீசன் ஆரம்பித்தை அடுத்து இப்பகுதிக்கு வர துவங்கியுள்ளன.
இந்நிலையில் நேற்று 3 வயதுடைய சுமார் 6 அடி உயரமுள்ள ஆண் யானை புளியங்குடி பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி வனச்சரகர் (பொறுப்பு) மயில், வனவர் முருகையா, வனக்காப்பாளர்கள் செந்தில்வேல், முருகன், வனக்காவலர்கள் திருவேட்டை, தங்கம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். இறந்து கிடந்த ஆண் யானை அரியவகை கல்யாண் இனத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாசுதேவநல்லூர் தலையணை பகுதியில் சுமார் 20 வயது மதிக்கதக்க பெண் யானை பாக்டீரியா நோய் தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.