கல்வி வளர்ச்சி நாளாக இன்று காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள், இன்று கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது என தமிழக அரசு முடிவு செய்து அது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அரசே அனைத்து பள்ளிகள் தோறும் கொண்டாடுகிறது.
இன்று காமராஜரின் 107வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி, சென்னை அண்ணாசாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார். அவருடன் அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இதேபோல அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் இன்று காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 9 மணிக்கு, கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் படத்துக்கு கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அதைத் தொடர்ந்து பல்லவன் இல்லம் எதிரே மற்றும் சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கே.வி.தங்கபாலு தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 10 மணிக்கு காமராஜர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், காமராஜரின் உதவியாளராக பணியாற்றிய சி.பி.எஸ்.வைரவன் எழுதிய காமராஜருடன் கால் நூற்றாண்டு' என்ற புத்தகத்தை, காந்தியடிகளிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய வி.கல்யாணம் வெளியிடுகிறார். முதல் பிரதியை, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக்கொள்கிறார்.