உலக்கையால் அடித்து பெண் படுகொலை-கணவன் வீட்டாரின் அக்கிரமம்
சென்னை: தங்களது பேச்சைக் கேட்காமல் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வாலிபரின் அண்ணன், அவரது மனைவியை கொடூரமாக உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.
படுகாயமடைந்த நிலையில் நான்கு நாள் பேச்சு மூச்சின்றி இருந்த அந்தப் பெண் இன்று உயிரிழந்தார்.
சென்னை கோடம்பாக்கம் தாஸ்புரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ராஜேஸ்வரி (23). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்து வந்த பொன்னுரங்கம் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் புதுபேட்டை பொன்னுரங்கத்தின் சொந்த ஊர். சென்னையில் விடுதியில் தங்கி படித்தார்.
இவர்களது காதல் விவகாரம் ராஜேஸ்வரி வீட்டிற்கு தெரியவந்தது. ராஜேஸ்வரியின் வற்புறுத்தலின் பேரில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர். இது பொன்னுரங்கத்தின் வீட்டிற்கு தெரியாது.
கல்லூரி படிப்பு முடிந்ததும் 8 மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரியை பொன்னுரங்கம் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவரை கோடம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு பொன்னுரங்கம் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மேற்படிப்புக்கு சேர்ந்தார். வாரம் ஒருமுறை தனது வீட்டிற்கு தெரியாமல் வந்து ராஜேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி விட்டு சென்றார்.
சில தினங்களுக்கு முன்பு பொன்னுரங்கத்தின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்தனர். இதையடுத்து தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்ட தகவலை பெற்றோரிடம் தெரிவித்தார் பொன்னுரங்கம்.
இதனால் அவர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். உனது மனைவியைக் கூட்டி வா பேசலாம் என்று கூறினர். சரி, திருந்தி விட்டார்களோ என்று நினைத்து பொன்னுரங்கம், ராஜேஸ்வரியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அவரை வரவேற்ற குடும்பத்தினர் சகஜமாக பேசியுள்ளனர். இதையடுத்து வெளியில் சென்றுள்ளார் பொன்னுரங்கம்.
அவர் போன பின்னர் பொன்னுரங்கத்தின் அண்ணன் ராஜா, ஆபாசமாக ராஜேஸ்வரியை திட்டினார். பின்னர் கோபத்தில், வீ்ட்டில் இருந்த உலக்கையை எடுத்து ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் ராஜாவைக் கைது செய்தனர்.
கடந்த 4 நாட்களாக கோமா நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
திருமணம முடிந்த 8 மாதத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதால் ராஜா மீது கொலை வழக்கும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் போடப்பட்டுள்ளது. இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.