துருப்பிடிக்கும் மிக்-29 போர் விமானங்கள்: அந்தோணி
நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தோணி.
ரஷ்யத் தயாரிப்பான மிக் 29 விமானங்களின் வால் பகுதி எளிதில் துருப்பிடிக்கும் வகையி்ல அமைந்துள்ளதாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த மிக் 29 ரக போர் வி்மானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த விமானத்தை ஆய்வு செய்து பார்த்தபோது விமானத்தின் வால் துருப்பிடித்திருந்த காரணத்தால்தான் அது விபத்துக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தகவலை இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளது ரஷ்யா.
இதுகுறித்து ராஜ்யசபாவில் அந்தோணி அளித்த பதிலில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யாவில் மிக் 29 விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தின் வால் பகுதியில் துருப்பிடித்திருந்ததால், விமானத்தில் விரிசல் ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மிக் 29 ரக போர் விமானங்கள் அமைப்பு ரீதியாக தவறானவை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் உடனடியாக இந்திய விமானப் படையிலிருந்து மிக் 29 ரக போர் விமானங்களை விலக்கும் திட்டம் இல்லை.
பழுதுபார்க்கும் குழுவும், தடுப்பு நடவடிக்கைகளும் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. இதுவரை மிகப் பெரிய அளவிலான பிரச்சினைகளை நமது நாட்டு மிக் 29 ரக போர் விமானங்கள் சந்திக்கவில்லை என்பது ஆறுதலானது என்றார்.
மிக் ரக விமானங்களில் ஏகப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். இந் நிலையில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அதை மத்திய அமைச்சர் ஒப்புக் கொண்டிருப்பதன் மூலம் இந்திய விமானப் படையின் பலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இப்படி குழப்பங்கள் இருந்தாலும், இந்தியாவிடம் உள்ள மிக் 29 போர் விமானங்களை மேம்படுத்துவது தொடர்பான 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சமீபத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்தவெளியில் ராணுவ வெடிபொருள்கள்..
இந் நிலையில் 85,000 டன்கள் அளவிலான ராணுவ வெடிபொருள்கள் தாற்காலிகமான இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ராஜ்யசபாவில் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ராணுவத்தில் வெடிபொருள்களை சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ராணுவ வெடிபொருள்களை திறந்தவெளியில் வைத்ததால் கடந்த சில வருடங்களில் பல்வேறு வெடிவிபத்து சம்பவங்கள் நேரிட்டன.
மூன்று வருடங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீரில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட ராணுவ வெடிபொருள்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
ராணுவ வெடிபொருள்கள் 3127 டன்கள் மற்றும் கப்பற்படைக்குச் சொந்தமான 300 டன்கள் அளவிலான வெடிபொருள்கள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன என்றார்.