அண்ணா சாலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் - 3 மணி நேரம் பாதிப்பு
சென்னை: சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று நடத்திய சாலை மறியலால் அண்ணா சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக அண்ணா சாலையையொட்டியுள்ள முக்கியச் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று போராட்டம் நடத்த அதிகாலை 8 மணியில் இருந்தே அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கூடத் தொடங்கினார்கள்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேல் கூடினார்கள். அவர்கள் அண்ணாசாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடாமல் இருப்பதற்காக தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சிவானந்தா சாலையில் கூடி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில், திடீரென அவர்கள் அண்ணாசாலைக்குள் புகுந்து சாலையில் உட்கார்ந்து மறியல் செய்தனர். முதலில் சாலையின் ஒரு பகுதியில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள் சாலையின் மறு பகுதியிலும் உட்கார முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அதையும் மீறி சாலையின் இரு புறங்களிலும் உட்கார்ந்து மறியல் செய்தனர்.
இதனால் அண்ணாசாலையில் இருந்து சைதாப்பேட்டை மார்க்கம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் மார்க்கம், காமராஜர் சிலை வழியாக சென்ட்ரல் மார்க்கம், பாரிமுனை மார்க்கம், திருவல்லிக்கேணி மார்க்கம் ஆகிய அனைத்து மார்க்கங்களிலும் போக்குவரத்து தடைபட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சங்க பொருளாளர் புவனேஸ்வரி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் . அதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. போலீசார் தள்ளியதால் தான் அவர் கீழே விழுந்தார் என்று கூறி போலீசாரை கண்டித்து குரல் எழுப்பினார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 7000க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடற்கரை சாலை, பாரிமுனை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை என முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.