திமுக பந்த்-உண்ணாவிரதம் விதிமீறலல்ல: குப்தா
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி திமுக மாநிலம் தழுவிய பந்த் நடத்தியது. 26ம் தேதி முதல்வர் கருணாநிதி இதே பிரச்சனை தொடர்பாக அண்ணா சமாதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளும் கட்சியான திமுக நடத்திய இந்த பந்த் மற்றும் முதல்வரின் உண்ணாவிரதம் ஆகியவை தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே திமுக மீதும், தேர்தலில் வென்ற திமுக எம்பி்க்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ராமசாமி கோரியிருந்தார்.
இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தேர்தல் நேரத்தி்ல ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தேர்தல் நடத்தை விதிகள் கொண்டு வரப்பட்டன. இந்த விதிகளில் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பது குறித்து ஏதும் கூறப்படவில்லை.
மேலும் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசத்தின்போது திமுக நடத்திய பந்த் மற்றும் முதல்வரின் உண்ணாவிரதத்தால் தேர்தல் பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.
அதே போல இந்த பந்த், உண்ணாவிரதத்தின்போது அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டவில்லை.
எனவே திமுக நடத்திய பந்த், முதல்வரின் உண்ணாவிரதம் ஆகியவை தேர்தல் விதிமீறல் அல்ல. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து டிராபிக் ராமசாமி கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கு ஒருவாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.