சென்னையில் தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம்
சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து பட்டரவாக்கம் ரயில் நிலையம் வரையிலான 3 கிலோ மீட்டர் மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன.
மாநிலத்திலேயே இவ்வளவு தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்கப்படிருப்பது இதுவே முதல்முறை. ஆனால் இந்த சாலையை மக்கள் உடனடியாக பயன்படுத்த முடியாது. இன்னும் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.
சென்னையை சுற்றி தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வழியாக மாதவரம் வரை வெளிவட்ட அகலப்பாதை அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த சாலையின் மொத்த தூரம் 32 கிலோ மீட்டர். ரூ. 405 கோடி செலவில் சாலையை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதில் தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை 19 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்தது.
இப்போது மதுரவாயலில் இருந்து மாதவரம் வரை 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் 2-வது கட்ட பணி நடக்கிறது.
இதில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து பட்டரவாக்கம் ரெயில் நிலையம் வரை 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலப் பணிகள் இப்போது முடிவடைந்துள்ளன.
இருபுறமும் அகன்ற பாதைகளாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 276 தூண்கள் இந்த மேம்பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. தமிழ்நாட்டிலேயே இதுதான் மிக நீளமான மேம்பாலம் என்றும் கூறப்படுகிறது.
பாலம் பணி முற்றிலும் முடிந்து விட்டாலும், இன்னும் அந்தப் பாலத்தை சாலையுடன் இணைப்பது உள்ளிட்ட பணிகள் முடியாமல் உள்ளன. இது முடிவு பெற அடுத்த ஜூன் வரை ஆகுமாம். எனலே மக்கள் இந்த சாலை அடுத்த ஆண்டுதான் பயன்படுத்த முடியும்.
முழு பாதையும் திறக்கப்பட்டால் இத்துடன் சென்னை - திருச்சி, ஜி.எஸ்.டி. ரோடு, சென்னை - பெங்களூர் ரோடு, எம்.டி.எச். ரோடு, சென்னை-கொல் கத்தா ஆகிய 4 தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டு விடும். சென்னைக்குள் வராமலேயே வாகனங்கள் செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications