For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல்-இலங்கைத் தமிழர்களிடம் ஆர்வம் இல்லை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போரை முடித்துள்ள சூட்டோடு, வட கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு நடத்தவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தமிழர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. விரக்தி மனப்பான்மையில்தான் இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது வட கிழக்கு மாகாணங்கள்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின்னர் வட கிழக்கு மாகாணங்கள் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவுள்ளன. ஆனால் இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தற்போது அகதிகள் முகாம்கள், முள் வேலிகளுக்கு நடுவே பரிதவித்து வருகின்றனர்.

இலங்கை மக்கள் தொகையில் 1.5 சதவீதம் பேர் முள்வேலிகளுக்கு மத்தியில் சிறைக் கைதிகள் போல இருப்பதாக ஒரு கணிப்பு தெரிவித்துள்ளது.

வாழ்க்கை எப்படி போகப் போகிறது என்பதில் உத்தரவாதம் இல்லை, எதிர்காலம் குறித்த உத்தரவாதம் இல்லை, உடல் நலிவு, உறவுகளின் இழப்பு, கண்ணீர் உகுக்காத நாள் இல்லை என்று சோகங்களே சுற்றிச் சூழ்ந்துள்ள இந்த நிலையில், தேர்தல் குறித்து மக்களுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.

இதுகுறித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கூறுகையில், தமிழர்கள் முன்பு இன்று ஆயிரக்கணக்கான பிரச்சினகைள் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் அவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

போர் முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் நிலைமை மேம்படவில்லை. ராணுவ சோதனைச் சாவடிகளும், சாலைத் தடைகளும் இன்னும் அப்படியேதான் உள்ளன. இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் எப்படி மக்கள் தேர்தலை வரவேற்க முடியும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசு வசம் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மட்டுமே ஆகஸ்ட் 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பகுதிகளுக்கு (இவை அனைத்தும் புலிகள் வசம் இருந்தவை) படிப்படியாக தேர்தல் நடத்தப்படுமாம்.

இந்தப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் யாருமே இன்னும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து தரை மட்டமாகிக் கிடக்கின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில், அரசு ஆதரவு கட்சிகள் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. காரணம், ராணுவ, போலீஸ் பலத்தை பிரயோகித்தும், மிரட்டியும், கள்ள ஓட்டுக்களைப் போட்டும், எதிர்க்கட்சியினரை மிரட்டியும், எப்படியும் இஇந்த இரு இடங்களிலும் ஆளுங்கூட்டணியே வென்று விடும் என்று இலங்கை எதிர்க்கட்சியினரே கூறுகின்றனர்.

புலிகளுக்கு ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடந்தால் இந்தக் கூட்டமைப்பே வெற்றி பெறும். ஆனால் அப்படி எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் அந்த யாழ்ப்பாண வக்கீல்.

சிங்கள பகுதிகளில் முன்பு நடந்த தேர்தல்களிலும் கூட ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகம், சிங்கள மக்களுக்கே நன்கு தெரியும். இந்த நிலையில் தமிழர் பகுதிகளில் நிச்சயம் இதை விட மிகப் பெரிய அளவில் மோசடிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழம்பெரும் தமிழ் எம்.பியும், யாழ்ப்பாணம் மேயர் தேர்தல் வேட்பாளருமான அனந்தசங்கரி சனிக்கிழமை கூறுகையில், ஒரு தமிழ் அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை மிரட்டி வருகிறார்.

அந்த அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கூலிப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுற்றி வருகின்றனர். மக்களை அச்சுறுத்தி எங்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டி வருகின்றனர். இதை எங்களால் தடுக்க முடியாது, வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். இவர்களை யாரும் எதிர்த்துப் பேச முடியாது.

சைக்கிள்கள் ஆயுதம் தாங்கிய கும்பல் வலம் வருவதை சாதாரணமாக பார்க்கலாம். எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைக் கூட இவர்கள் தடுத்து இடையூறு செய்கிறார்கள்.

யாழ்ப்பாணம் மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு அரிய சந்தர்ப்பம். சுதந்திரமாக செயல்பட விட்டால் யாழ்ப்பாணம் மக்கள் தமிழர்களின் குரலாக எதிரொலிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அரசு ஆதரவுப் படையினரும், கூலிப்படையினரும் இந்தத் தேர்தலை தங்களுக்கு சாதகமாக்கி வருகின்றனர் என்றார்.

டக்ளஸ் தேவானந்தா கிட்டத்தட்ட ராஜபக்சேவின் எடுபிடி போல இருக்கிறார். ஆளுங்கூட்டணி சார்பில் இவரது கட்சியும் போட்டியிடுகிறது.

யாழ்ப்பாணம் மக்கள் தவிர வவுனியா மக்களும் கூட தேர்தலை ரசிக்கவில்லை. ஓட்டுப் போடக் கூட அவர்கள் முன்வருவார்களா என்பது தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X