விஜய்காந்துடன் மார்க்சிஸ்ட் கூட்டணி?
அவர் அளித்துள்ள பேட்டியில்,
மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்த சாதகமான நிலைமை, திமுக அரசின் ஒரு ரூபாய் அரிசி திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தான் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிக்குக் காரணம் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
எங்கள் கட்சி குறித்த பல சுய விமர்சனங்களை முன் வைத்தும், அதே நேரத்தில் அதிமுகவின் சில பலவீனங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைக் கூறியிருந்தோம்.
இந்த விமர்சனங்கள் அதிமுகவை கொச்சைப்படுத்தவோ அவதூறு பரப்பும் நோக்கிலோ கூறப்படவில்லை. அந்தக் கட்சி தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்களில் மேலும் முனைப்போடு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அதைக் கூறினோம்.
எங்கள் விமர்சனம், வரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பயனளிப்பதாகவே இருக்கும். இந்தப் பிரச்சனை குறித்து விரைவில் அதிமுக தலைமையுடன் பேசுவோம். (ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தந்தால், ஏற்கனவே ராமதாஸ் நேரம் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார்!).
தமிழகத்தில் ஏராளமான மக்கள் பிரச்சனைகள் உள்ளன. இதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதைத்தவிர, எங்கள் கட்சி சுயேச்சையான பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளது.
வரும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலின்போதும் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
மார்க்சிஸ்ட்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இரு கட்சிகளும் பேசி வருகிறோம். இனிவரும் தேர்தல்களில், தொகுதி உடன்பாடு தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே ஒத்த கருத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.
எதிர்காலத்தில் விஜயகாந்த்தின் தேமுதிகவுடன் கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் கூட்டணி மூலம் பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என்பதை அகில இந்திய அளவில் எங்கள் கட்சிதான் நிரூபித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் அரசியலில் ஏற்படும் வளர்ச்சிப் போக்கை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் வரதராஜன்.
இதன்மூலம் எதிர்காலத்தில் விஜய்காந்துடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் முயலலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வரதராஜன் கூறினாலும் அதை ஜெயலலிதா எந்த அளவுக்கு ஏற்பார் என்பது சந்தேகமே.