ஆஸி கல்லூரி மூடல்-இந்திய மாணவர்கள் தவிப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்போர்ன் சர்வதேச கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் அந்தக் கல்லூரியை மூடி விட்டனர்.
இதனால் இந்தியா, நேபாளத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் மாணவர்களை தவறான தகவல்களைக் கூறி பல கல்லூரிகள் சேர்ப்பதாக விக்டோரியா மாகாண கல்வித் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து சட்டவிரோதமாக இயங்கும் கல்லூரிகளின் (அதாவது போலிக் கல்லூரிகளை) அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
அதன்படி மெல்போர்ன் சர்வதேச கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு பயின்று வரும் 300க்கும் மேற்பட்ட இந்திய, நேபாள நாட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களுக்கு மாற்றுக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா அல்லது பணத்தையெல்லாம் இழந்த நிலையில் நாடு திரும்ப வேண்டுமா என்ற பெரும் குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு இதேபோல சிட்னி குளோபல் கல்லூரி மூடப்பட்டபோதும் இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே இன ரீதியான தாக்குதல்களில் சிக்கி இந்தியர்கள் பரிதவித்து வரும் நிலையில் கல்லூரி மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது விக்டோரியா மாகாண நிர்வாகம்.












Click it and Unblock the Notifications