புலிகளால் தமிழர்களுக்கு பேரிழப்பு-கருணா சொல்கிறார்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான 30 ஆண்டு கால மோதலால், தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் கருணா.
இதுகுரித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பையும், சேதத்தையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
வன்னித் தமிழர்களை அதிபர் ராஜபக்சே, புலிகளின் பிடியிலிருந்து மீட்டுள்ளார். உண்மையான சுதந்திரத்தை இப்போதுதான் வன்னித் தமிழர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றார் கருணா.
புலிகளுக்கு எதிராக திரும்பி, அரசுப் படையினருடன் இணைந்து கிழக்கில் புலிகள் கை தாழ பேருதவி புரிந்தவர் கருணா. பின்னர் ராஜபக்சே கட்சியில் இணைந்து இப்போது அமைச்சராகவும் உள்ளார்.
இவர் வகித்து வரும் பதவி தேசிய மறு சீரமைப்புத் துறை அமைச்சர் ஆகும். ஆனால் இதுவரை தமிழர்களின் மறு வாழ்வுக்காகவோ, தமிழர் பகுதிகளின் மறு சீரமைப்புக்கோ கருணா எந்தத் திட்டத்தையும் அறிவித்ததில்லை. அவ்வப்போது புலிகளைத் திட்டி பேட்டி மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.