2 குழந்தைகளுடன் கணவன், மனைவி தற்கொலை
சென்னை: கடன் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கேட்டு திட்டியதால், மனம் உடைந்த கணவனும், மனைவியும் தங்களது இரு குழந்தைகளுடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை பாடி, சீனிவாசா நகர் பாரதி தெருவில் வசித்து வந்தவர் சுபாஷ் பிரியதர்சன் (38). இவரது மனைவி புஷ்பலதா (32). இவர்களுக்கு மித்ரா (5) என்ற மகளும், ஜீவன் (3) என்ற மகனும் இருந்தனர்.
சுபாஷ் பிரியதர்சன் எல்.ஐ.சி. ஏஜண்டாக வேலை செய்து வந்தார். மேல் தளத்தில் வசித்து வந்த இவரது வீடு கடந்த சில நாட்களாக திறக்கப்படவில்லை. இவரது வீட்டின் கீழ் சிறிய தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று மாலை மேல் மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கீழே வேலை செய்த தொழிலாளர்கள் மேலே சென்று பார்த்தனர். அப்போது வீடு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது.
சந்தேகமடைந்த அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சுபாஷ், புஷ்பலதா மற்றும் இரு குழந்தகளும் பிணமாகக் கிடந்ததைக் கண்டனர். நான்கு பேரின் உடல்களும் அழுகியிருந்தன.
குழந்தையின் அருகில் பால் பாட்டில் கிடந்தது. கொடிய விஷத்தை குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு, அதே விஷத்தை கணவன்-மனைவி இருவரும் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருத்தணியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்று தெரிகிறது. கடந்த ஆண்டுதான் இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார். யாருடனும் இந்தக் குடும்பத்தினர் அதிகம் பேச மாட்டார்களாம். சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த சிலர் வந்து திட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அவமானமடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications