கட்டாய திருமண பதிவு- முஸ்லீம் கட்சி எதிர்ப்பு
புதுக்கோட்டை: தமிழகத்தில் கட்டாய திருமண பதிவு சட்டம் அமுல்படுத்தப்படும் செயல் முஸ்லீம் ஜமாத்களின் கட்டமைப்பை உடைத்தெரிக்கும் செயல் என்று மக்கள்
ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். செரீப் கூறுகையில், ஒரு திருமண வழக்கில், பல்வேறு சமயத்தவர்களும் ஒவ்வொரு பதிவேடு வைத்துள்னர். எனவே அரசே நேரடி திருமண பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆறு மாதம் முன்பு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந்த உத்தரவை மத்திய மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை நிறைவேற்ற உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து தகவல் வந்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு சமயத்தினருக்கும் சிவில் சட்டம் தனித்தனியாக உள்ளது. இதே போன்று முஸ்லீம் மதத்தினருக்கும் தனியாக சிவில் சட்டம் உள்ளது.
முஸ்லீம் மக்களின் திருமணத்தை ஜாமாத்க்களே முடிவு செய்து பதிவும் செய்கின்றது.
இந்த நிலையில் அரசின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஜமாத்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகும். அதிகாரம் பறிக்கப்படும்.
இஸ்லாமிய சிவில் சட்டத்தில் அரசோ அல்லது நீதி மன்றமோ தலையிடக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.
இந்த சட்டம் மூலம் சுயமரியாதை திருமணமும் பாதிக்கப்படுகின்றது. அதன்படி ஒரு சுய மரியாதை திருமணம் ஒரு அரசியல் தலைவர் முன்பு இரண்டு சாட்சிகள் முன்னிலையில் செய்து கொண்டாலே போதும். பதிவு செய்வதன் மூலம் இந்த முறைக்கு பாதிப்பு எற்பட வாய்ப்பு உண்டு.
காதல் திருமணங்கள் மற்றும் கலப்பு திருமணங்கள் திருமண பதிவு சட்டம் மூலம் தடுக்கும் குறுகிய நோக்கம் உள்ளதோ என்ற அய்யப்பாடு பலரிடமும்
காணப்படுகின்றது.
தற்போது திருமணத்தை பதிவு செய்யும் சார் -பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. இந்த சட்டம் மூலம் லஞ்சம் மேலும் வலுப்பெறும். இதைத் தவிர இந்த சட்டம் மூலம் பெரிய அளவில் மக்களுக்கு நன்மை இல்லை.
இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மீண்டும் வர்ணாசிரமம் தலையெடுக்கும் அபாயம் நிறைந்துள்ளது. இதனால் பொது மக்களே அதிகம் பாதிக்கப்படுவர்.
எனவே இந்த சட்டத்தில் இருந்து முஸ்லீம் மக்களுக்கு விதி விலக்கு அளிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்றார்.