ராணுவ ஆளெடுப்பில் வன்முறை - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் - கூட்ட நெரிசலில் ஒருவர் பலி

உ.பி. மாநிலம் சந்தாலி நகரில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் முகாம் நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள மகேந்திரே பாலிடெக்னிக் கல்லூரியில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தினரை அமைதிப்படுத்த ராணுவத்தினர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து திடீரென ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் சிக்கி ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அங்கிருந்த இளைஞர்கள் மிரண்டு ஓடினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கொந்தளித்த இளைஞர்கள் கயா - முகல்சராய் சாலையில் குவிந்தனர். அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் குதித்தனர். மேலும், சந்தாலி நிலையத்தில் ஒரு ரயில்வே கேபினையும் தீவைத்து எரித்தனர். ரயில் நிலையத்தையும் சூறையாடினர்.
இதனால் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. பல தொலை தூர ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உ.பி. மாநில அமைச்சரவை செயலாளர் சசாங்க் சேகர் சிங் கூறுகையில், ராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தாலும் நெரிசலில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதை அரசுத் தரப்பி்ல் உறுதி செய்யவில்லை.












Click it and Unblock the Notifications