ஹின்ட்ராப் உதயக்குமார் புதுக் கட்சி தொடங்கினார்

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி பெரும் பேரணியை நடத்தினர். சம உரிமை கோரி நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணியை, போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்கினர்.
போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ஹின்ட்ராப் அமைப்பின் தலைவர்களான உதயக்குமார் உள்ளிட்ட ஐவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைபட்டிருந்த உதயக்குமார் உள்ளிட்ட இரு தலைவர்கள் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளதாக உதயக்குமார் அறிவித்தார்.
மனித உரிமைக் கட்சி என்று தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளார் உதயக்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வம்சாவளி இந்தியர்களுக்காக ஆளுங் கூட்டணியும் சரி, எதிர்க்கட்சிக் கூட்டணியும் சரி எதுவுமே செய்யவில்லை. வேலை, கல்வி, மத சுதந்திரம் என அனைத்திலும் இந்திய வம்சவாளியினர் மிகவம் மோசமான நிலையில் பின் தங்கியுள்ளனர்.
மலேசிய மக்கள் தொகையில் 8 சதவீதமாக உள்ள வம்சாவளி இந்தியர்கள் மிகவும் அடித்தட்டு நிலையில்தான் உள்ளனர்.
2013ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளைப் பிடிக்கும் நோக்கில் செயல்படவுள்ளோம்.
வளர்ச்சிக்கான தேசிய நீரோட்டத்தில் இந்தியர்கள் மீண்டும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே எங்களது லட்சியம். கடந்த 52 ஆண்டுகளாக பின்தங்கியுள்ள இந்திய வம்சாவளியினரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
எனது கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன். இருப்பினும் இதுவரை அரசிடமிருந்து ஒப்புதல் வரவில்லை என்றார்.
மலேசியாவில் ஏற்கனவே மலேசிய இந்திய காங்கிரஸ் உள்பட 3 இந்திய வம்சவாளியினருக்கான கட்சிகள் உள்ளன. இதில் ஒன்று ஹின்ட்ராப் அமைப்பிலிருந்து பிரிந்த சிலர் தொடங்கியுள்ள கட்சி. இந்தக் கட்சி தவிர மற்ற இரு கட்சிகளுமே அரசுக்கு ஆதரவாக உள்ளன.












Click it and Unblock the Notifications