நாட்டின் 30 நதிகளை இணைக்கலாம்-ஆய்வறிக்கை

கடந்த பாஜக ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (National Water Development Agency-NWDA) உருவாக்கப்பட்டு நாட்டின் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது.
அந்த அமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது இதன் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் இந்த அமைப்பு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அதில், இமயமலையை சேர்ந்த 14 ஆறுகளையும், தென்னிந்தியாவில் உள்ள 16 ஆறுகளையும் இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கேன்-பேட்வா நதிகளை இணைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இமயமலையை சேர்ந்த 14 நதிகளில் கோசி-மெச்சி, கோசி-காக்ரா, காக்ரா-யமுனா, கங்கை-கண்டாக், யமுனா-சாரதா, யமுனா-ராஜதான், மானஸ்-சந்தோஸ்-தீஸ்தா-கங்கா ஆகியவை முக்கியமானவை.
காவிரியும் வைகையும்
அதுபோல தென்னிந்தியாவை பொறுத்தவரை மகாநதி-கோதாவரி நதிகளும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைக்க முடியும் என்றும் அதில் கோதாவரி-கிருஷ்ணா ஆகிய இரண்டு ஆறுகளும் மூன்று இடங்களில் இணைக்கப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ சைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியை இணைக்கலாம். சோமசீலம் மற்றும் கிரேண்டு அனிகட் ஆகிய இடங்களில் பென்னாறு, காவிரி ஆறு ஆகியவற்றை இணைக்கலாம்.
கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்கலாம்.
பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆகியவையும் இணைக்கப்படலாம் என்று திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications