மும்பை தீவிரவாதத் தாக்குதல்-கசாப் திடீர் ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

Kasab
மும்பை: மும்பை தீவிரவாத் தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த சம்பவத்தில் தனது பங்கை தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாப் ஒப்புக் கொண்டுள்ளான். மேலும், என்ன நடந்தது என்பதையும், எப்படியெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது என்ற முழு விவரத்தையும் கோர்ட்டில் அவர் புட்டு புட்டு வைத்துள்ளான்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தி அதி பயங்கர, துணிகர தாக்குதல் உலகை உலுக்கியது. இந்த சம்பவத்தை டிவிகளில் நேரடியாக பார்த்த உலகமே அதிர்ந்து, ஸ்தம்பித்துப் போனது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.

கசாப் தற்போது மும்பைத் தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை ஒப்புக் கொண்டுள்ளான். என்ன நடந்தது, யார் யாருக்கு பங்கு உண்டு என்பதையும் அவன் புட்டுப் புட்டு வைத்துள்ளான்.

கசாப் மும்பை தனிக் கோர்ட்டில் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது...

- இந்தத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவனான ஜாகியூர் ரஹ்மான் லக்விதான்.

- இந்தத் தாக்குதலி்ல் ஈடுபட்ட பாகிஸ்தானியர்களை கையாண்டது அபு அம்சா.

- நான் உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாதிகளும் கராச்சியிலிருந்து லக்வி மற்றும் அம்சா தலைமையில் அழைத்து வரப்பட்டோம்.

- இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக என்னையும், பிறரையும் தேர்வு செய்தார் லக்வி.

- சிறு படகு மூலம் நாங்கள் கராச்சியிலிருந்து அழைத்து வரப்பட்டோம். என்னுடன் மேலும் 9 தீவிரவாதிகளும் மும்பைக்கு படகு மூலம் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், மும்பைத் தாக்குதல் குறித்த அனைத்துத் தகவல்களையும் விரிவாக தெரிவித்துள்ளான் கசாப். அதுதவிர மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை ஆகியவற்றில் எப்படி தாங்கள் செயல்பட்டோம், எத்தனை பேரைக் கொன்றோம் என்பதையும் விவரித்துள்ளான்.

கஸாப் தான் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டு திடீர் வாக்குமூலம் கொடுத்துள்ளது அவனது வக்கீலுக்கு பெரும் வியப்பைக் கொடுத்துள்ளதாம்.

அதேசமயம், அரசுத் தரப்புக்கு இது மிகப் பெரிய வெற்றி என்று சிறப்பு அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறியுள்ளார். இருப்பினும் கசாப் ஒரு சிறந்த நடிகன். எனவே அவனது ஒவவொரு செயலையும் கோர்ட் கவனமுடன் கையாள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கசாப் வாக்குமூலம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், அரசுத் தரப்புக்கு இது நிச்சயம் வெற்றி. இருப்பினும், இந்த வாக்குமூலத்தை கசாப் எப்படிக் கொடுத்தான், ஏதாவது நிர்ப்பந்தம் இருந்ததா என்பதை ஆராய வேண்டும்.

அவன் உண்மை சொல்கிறானா, இல்லையா என்பதையும் அறிய வேண்டியுள்ளது.

இந்த வழக்கில் 135வது சாட்சி தனது வாக்குமூலத்தை அளிக்க இருந்தபோது, கசாப் எழுந்து, தான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறினான்.

பயங்கர தீவிரவாதியான கசாப் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பான் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆரம்பத்திலிருந்தே பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறான் கசாப். தண்டனையிலிருந்து தப்ப இவ்வாறு செய்கிறான்.

உதாரத்திற்கு முதலில் தான் பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறினான். அது சரிப்படவில்லை என்பதால், தான் மைனர் என்றான். கசாப் ஒரு பெரிய நடிகர் என்பதை கோர்ட்டுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகிறேன்.

கசாப்புக்கு ஆங்கிலம், இந்தி, உருது புரிகிறது, தற்போது மராத்தியும் கற்றுக் கொண்டு, கோர்ட்டி்ல பேசப்படுவதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறான் என்றார்.

கசாப் வாக்குமூலம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறுகையில், விசாரணை முழுமையாக முடிய வேண்டும். மிகக் கடுமையான தண்டனை கசாப்புக்கு வழங்கப்பட வேண்டும். கசாப், மிகப் பெரிய சதிக் கூட்டத்தில் ஒரு துளிதான். உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் முடிவு கட்ட வேண்டும் என்றார்.

கஸாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற அக்டோபர் மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே தனி நீதிபதி தஹிலியானி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மொத்தம் உள்ள 150 சாட்சிகளில் 134 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர்.

ஹில்லாரி வந்துள்ள நேரத்தில் ஒப்புதல்...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிணடன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் கசாப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கசாப் வாக்குமூலம் ஆதாரம் அல்ல-பாக்:

ஆனால், கசாப் தந்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாகி விடாது என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமது முக்தார் கூறுகையில், இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம்தான். ஆதாரம் அல்ல.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிறரின் பெயர்களைக் கூறியுள்ளார் கசாப். வெறுமனே பெயர்களைக் கூறுவதால் மட்டும், அவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று ஆகி விட முடியாது. ஆதாரம் வேண்டும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கசாப் இவ்வாறு கூறியுள்ளதாக கருதுகிறேன்.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக எந்தத் தீவிரவாதியையும் பாகிஸ்தான் சும்மா விடாது என்றார் செளத்ரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+