அமிலத்தில் போட்டு வைக்கப்பட்ட நகை வியாபாரி தலை?
கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) நகைகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 6ம் தேதியிலிருந்து சுரேஷ்குமாரைக் காணவில்லை. மறுநாள் காலையில் சென்னை சூளை பெரியமேடு அருகே சட்டண்ண தெருவில் கருப்பு பாலித்தீன் பையில் அவரது இரண்டு கைகளும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டிய வால்டாக்ஸ் சாலையில் அவரது இரு கால்களும் கிடந்தன.
பூக்கடை என்எஸ்சி போஸ் ரோடு அருகே கிருஷ்ணப்ப மேஸ்திரி சாலையில் உடல் பகுதி கிடந்தது. ஆனால், தலை மட்டும் சிக்கில்லை.
இந் நிலையில் நேற்று தம்புசெட்டி தெருவில் குப்பைமேட்டில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓடு குறுக்கு வாட்டில் அறுக்கப்பட்டிருந்தது.
இது சுரேஷ்குமாரின் தலையாக இருக்கக் கூடும் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தடய அறிவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை நடந்து ஒன்றரை மாதம் கழித்து குமாரின் தலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகை பட்டறைகளில் விசாரணை...
இந்தத் தலையை அமிலத்தில் போட்டு வைத்திருந்து பின்னர் மண்டை ஓட்டை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்து நகைப் பட்டறைகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் தலையை போட்டு வைத்து தலைமுடி தோல் தசை ஆகியவை சிதைந்த பிறகு மண்டை ஓட்டை குப்பையில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 3 நகை வியாபாரிகளிடமும் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர் தனிப்படை போலீசார்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்த வழக்கில் எங்களுக்கு கேரளாவை சேர்ந்த நகை புரோக்கர், மேற்கு வங்கம்-ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த நகை வியாபாரி, புளியந்தோப்பை சேர்ந்த ஒரு பெண் ஆகிய 3 பேர் மீது எங்களது சந்தேகப்பார்வை விழுந்தது. அவர்கது வீடுகள், செளகார்பேட்டையில் உள்ள அவர்களுக்கு நெருக்கமான நபர்களின் வீடுகள், நகை பட்டறைகள், கடைகளில் கடந்த ஒருவார காலமாக தீவிர சோதனை நடத்தி வந்தோம்.
இதன் காரணமாக பயந்து போய் தலையின் மண்டை ஓட்டை நேற்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். கொலையாளிகளை நெருங்கி விட்டதால் தான் இதைச் செய்துள்ளனர் என்றார்.