அதிமுக புறக்கணிப்பு-தேமுதிகவுக்கு கூடுதல் வாய்ப்பு

கடந்த கால இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட அனுபவத்தால், ஆகஸ்ட் 18ம் தேதி ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை மதிமுகவும் வழிமொழிந்துள்ளது. பாமகவும் வரவேற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் முடிவு செய்யவுள்ளன.
முக்கிய கட்சியான அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக வரலாற்றில் ஒரு தேர்தலை புறக்கணிப்பு செய்வது என்பது இதுவே முதல் முறையாகும்.
அதி்முக கூட்டணியின் இந்த முடிவால் தற்போது அனைவரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது.
அதிமுகவின் வாக்குகளைத்தான் இதுநாள் வரை விஜயகாந்த் பெருவாரியாக பிரித்து வருகிறார். தற்போது அதிமுகவே போட்டியிடாமல் விலகி நிற்பதால் தேமுதிக வேட்பாளர்களுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இந்த்த தேர்தலில் திமுக - தேமுதிக நேரடி மோதல் என்ற நிலை உருவாகியுள்ளது. தேமுதிக உருவாகி இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்த கட்சியாகத்தான் தேமுதிக இருந்து வந்தது. ஆனால் முதல் முறையாக இரு முனைப் போட்டியை சந்திக்கிறது தேமுதிக.
அதிமுக கூட்டணி, விஜயகாந்த்துக்கு மறைமுகமாக ஆதரவு தந்தால் ஐந்து தொகுதிகளிலும் விஜயகாந்த் கட்சிக்கு வெற்றி கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால், இருவரும் கை கோர்த்தால் வெற்றி நிச்சயம் என்பதை கடந்த தேர்தலில் இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகளைப் பார்த்தால் புரியும்.
இளையாங்குடி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்றவர் திமுகவைச் சேர்ந்த ராஜ. கண்ணப்பன். இறுப்பினும் கட்சி செல்வாக்கை விட இவருக்கு சொந்த செல்வாக்கு அதிகம். இவர் 52.28 சதவீத வாக்குகள் பெற்று வென்றார்.
இத்தொகுதியில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்குகள் 2.78 சதவீதம்தான். அதிமுகவுக்கு 39.24 சதவீத வாக்கு கிடைத்தது.
தற்போது ராஜ கண்ணப்பன் அதிமுகவில் இருக்கிறார். கடந்த முறை அவர் பெற்றதில் பெரும்பாலானது அவர் சார்ந்த யாதவா சமூகத்தினர் வாக்குகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இங்கு அதிமுக, தேமுதிகவை மறைமுகாக ஆதரித்தால், தேமுதிகவுக்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
இதேபோல தொண்டாமுத்தூரில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக - தேமுதிக வேட்பாளர்கள் கூட்டாக 54.37 (மதிமுக 41.60, தேமுதிக 12.77) சதவீத வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணிக்கு 38.27 சதவீத வாக்குகள் கிடைத்தன.
கம்பம் தொகுதியில் மதிமுக - தேமுதிகவுக்கு கூட்டாக 53.77 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதில் மதிமுக பங்கு 43.24 சதவீதம். தேமுதிகவுக்கு 10.53 சதவீத வாக்கு கிடைத்தது. திமுக வேட்பாளர் செல்வேந்திரன் 41.57 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
பர்கூரில் அதிமுக கடந்த முறை 42.67 சதவீத வாக்குகளும், தேமுதிக 7.77 சதவீத வாக்குகளையும் பெற்றது. திமுகவுக்குக் கிடைத்தது 40.44 சதவீதம். அதிமுக - தேமுதிக கூட்டு வாக்குகள் 50.44 சதவீதமாகும்.
இதேபோல ஸ்ரீவைகுண்டத்தில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஊர்வசி செல்வராஜ் 40.78 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் 39.04 சதவீத வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் 3.38 சதவீத வாக்குகளையும் பெற்றார்.
இங்கு அதிமுக - தேமுதிக வாக்கு விகிதம் 44.16 சதவீதமாகும்.
ஆக, தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணி மறைமுக ஆதரவு தந்தால், நிச்சயம் தேமுதிக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்பதில் சந்தேகம் இல்லை.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அடுத்தடுத்த நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்கள் தேர்வு-விஜய்காந்த் தீவிரம்:
இந் நிலையில் தேமுதிக வேட்பாளர்கள் தேர்வில் விஜய்காந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications