ஜெ புறக்கணிப்பு முடிவு-மீறப் போகும் மார்க்சிஸ்ட்!
அதிமுக அவசர செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,
தமிழகத்தில் 5 தொகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களை புறக்கணிப்பதாக தீர்மானிக்கப்பட்டு, அதிமுக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடைத் தேர்தல்களை புறக்கணிக்கும் முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே இந்த முடிவை அவரிடம் தெரிவித்துள்ளதால், தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த முடிவை அவரும் ஏற்பார் என்று நம்புகிறேன்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
இதன்மூலம் தேர்தல் புறக்கணிப்பு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் அவர் விவாதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மார்க்சிஸ்ட் போட்டி?:
ஆனால், ஜெயலலிதாவின் நிலையை மார்க்சிஸ்ட் ஏற்காது என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அக் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகத் தெரிகிறது.
அக் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் சென்னையில் நாளை கூடி இது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளது.
இந்திய கம்யூனி்ஸ்ட் நிலை என்ன?:
மார்க்சிஸ்ட் போட்டியிடும் நிலையை எடுத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படலாம்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான தா.பாண்டியன் அதிமுக நிலையை ஆதரிப்பாரா அல்லது தேசிய அளவி்ல் தங்களது முக்கிய கூட்டாளியான மார்க்சிஸ்ட் நிலையே ஆதரிப்பாரா என்று தெரியவில்லை.
இடதுசாரி ஒற்றுமையைக் காப்பாற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு பாண்டியன் தள்ளப்படலாம். இது தொடர்பாக திருச்சியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
முதல் முறையாக புறக்கணித்த ஜெ..
சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலை முதல் முறையாக புறக்கணித்துள்ளார் ஜெயலலிதா.
இதற்கு முன் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
அப்போது திமுக-காங்கிரஸ் ஓரணியாகவும், அதிமுக எதிரணியிலும் இருந்தது. இந் நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ. ஆக இருந்த தொகுதியில், இன்னொரு காங்கிரஸ் கட்சிக்காரர்தான் இடைத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறிய எம்.ஜி.ஆர்., காங்கிரஸ் வேட்பாளர் அருணகிரி என்பவருக்கு ஆதரவாகப் பிரசாரமும் செய்தார்.