தென்காசி கோர்ட்-6 மாதங்களுக்குப் பின் நீதிபதி
தென்காசி: தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு 6 மாதத்திற்கு பிறகு நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி ஜேஎம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி குருவையா கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி இலவச சட்ட ஆலோசகராக பதவி உயர்வு பெற்று சென்றார். அதன்பின் இதுவரை நீதிபதி காலியிடம் நியமிக்கப்படாமல் இருந்தது.
பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, தென்காசி, கடையநல்லுர் ஆகிய காவல் நிலையங்கள், தென்காசி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மதுவிலக்கு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் தென்காசி கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இங்கு நீதிபதி இல்லாததால் வழக்கு விசாரணைகள் பாதிப்படைந்து வந்தது. கைதிகளை ஆஜர்படுத்தவோ, ஜாமீன் எடுக்கவோ செங்கோட்டை அல்லது சேரன்மகாதேவி கோர்ட்டுக்கு தான் செல்ல வேண்டியிருந்தது. இதனால் வக்கீல்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் தென்காசி ஜேஎம் கோர்ட் நீதிபதியாக சரிதா என்பவர் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்கிறார். இதனால் இதுவரை வீண் அலைச்சலுக்கு ஆளான போலீசார், பொதுமக்கள், வக்கீல்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
120 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்:
தென்காசி அருகே கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 120 மூடை ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தலை தடுக்க கலெக்டர் ஜெயராமன் உததரவிட்டுள்ளார். இதனால் நெல்லை மாவட்ட எல்லை பகுதிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தென்காசி பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து சுற்றி வந்தபோது சுந்தரபாண்டியபுரத்தில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அதிகாரி சுகுமார் மேற்பார்வையில் பறக்கும் படை தனி தாசில்தார் சங்கரலிங்கம், தாசில்தார் ஆறுமுகம் மற்றும் ஆய்வாளர்கள் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 ரேஷன் அரிசி மூடைகளை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட கடத்தல் கும்பல் தப்பியோடி விட்டது. பின்னர் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி தென்காசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டது.
மாமூல்: எஸ்ஐ, 3 ஏட்டுகள் மாற்றம்:
ஆலங்குளத்தில் நெடுஞ்சாலை ரோந்து பாதுகாப்பு பணியின் போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
பாளையை சேர்ந்தவர் சவுந்திரராஜன். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த வாரம் இவர், ஏட்டுகள் ராஜேஷ், முருகன், ஜெயக்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஆலங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது லாரி உள்ளிட்ட சில வாகனங்களை மறித்து சோதனையிடுவது போல் மாமூல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் நெல்லை போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதயைடுத்து நெல்லையில் எஸ்பி ஆஸ்ரா கர்க் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர், சவுந்திர ராஜன், ராஜேஷ், முருகன், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications