மீண்டும் டெல்லி மெட்ரோ திட்டத்தில் விபத்து - இரும்பு தூண் விழுந்து தொழிலாளி பலி
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மீண்டும் ஒரு விபத்தை சந்தித்துள்ளன. இன்று அதிகாலையில், இரும்பு தூண் ஒன்று விழுந்ததில் 22 வயதான தொழிலாளர் பலியானார்.
மேற்கு டெல்லியில், பஞ்சாபி பாக் என்ற இடத்தில் உள்ள ராம் பாக் என்ற இடத்தில், காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
இரும்புத் தூண் ஒன்றை கிரேன் மூலம் மேலே கொண்டு சென்றபோது திடீரென கிரேனின் சங்கிலி துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த இரும்புத் தூண் அப்படியே கீழே விழுந்ததில் 22 வயதான விக்கி சிங் என்பவர் சிக்கிப் படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மகாராஜா அக்ரசேன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களில் மெட்ரோ சந்தித்துள்ள 3வது விபத்து இது. ஜூலை 12ம் தேதி பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
அதற்கு அடுத்த நாள் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தபோது கிரேன்கள் சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.