இலங்கைக்கு இந்தியா துணை போக கூடாது-திருமா
டெல்லி: எங்கள் உணர்வுகளை காயப்படுத்தி விட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் இந்திய அரசு ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட் மக்கள் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கும் வகையில் செய்ல்படக் கூடாது.
ஜாதிய வன்கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான அநீதிகளையும் நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
இன்னும் மின்சாரத்தையே காணாத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது. இத்தகைய அடித்தட்டு மக்களின் இன்னல்களை களைய, நிதியமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் பேசும் இந்தியர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா, இல்லையா?. தமிழர்களை இந்திய குடிமக்களாக நீங்கள் கருதுவது உண்மையானால் எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும். எங்கள் உணர்வுகளை காயப்படுத்தி விட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றார்.