For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு கேபிள் டிவி-வேகமாக விலகும் ஆபரேட்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

Satellite Dish
சென்னை: தமிழக அரசு உருவாக்கிய அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இணைந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தற்போது அதிலிருந்து வேகமாக விலகி வருகிறார்கள்.

அரசியல் நிர்ப்பந்தங்களே இதற்குக் காரணம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புலம்புகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு மாறன் சகோதரர்களுக்கும், முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் மு.க.அழகிரி புதிய எம்.எஸ்.ஓ (ராயல் கேபிள் விஷன்) ஒன்றைத் தொடங்கினார்.

மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷனிலிருந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதில் இணையும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் தமிழக அரசு, அரசு கேபிள் டிவி கழகத்தைத் தொடங்கியது. இதையடுத்து அதில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்தனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது அரசு கேபிள் கழகத்திலிருந்து ஆபரேட்டர்கள் விலக ஆரம்பித்துள்ளனர். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக தாங்கள் விலகுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நெல்லை, வேலூரில்தான் இது அதிக அளவில் உள்ளதாம். நெல்லை, தஞ்சாவூர், வேலூரில் தற்போது அரசு கேபிள் கழகத்தில், அதிகபட்சம் 2 ஆபரேட்டர்கள்தான் உள்ளனராம்.

கோவையிலும் அதிக அளவில் ஆபரேட்டர்கள் வெளியேறியுள்ளனராம். இவர்கள் சுமங்கலி கேபிள் விஷனில் சேரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்களாம்.

கோவையில் பல இடங்களில் அரசு கேபிள் டிவி கழக கேபிள்களை, சுமங்கலி நிறுவனத்தினர் வெட்டி விடுவதாகவும் புகார்கள் வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலச் சங்கத் தலைவர் சகீலன் கூறுகையில், வேலூர், நெல்லையில் அரசு கேபிள் டிவி கழகம் கிட்டத்தட்ட இயங்கவில்லை. அங்கு அரசு சார்பி்ல் அமைக்கப்பட்ட அனைத்து வசதிகளும் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன.

தஞ்சையில், இன்னும் 200 ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி வசம்தான் உள்ளனர். ஆனால் கோவையில், கிட்டத்தட்ட அனைத்து ஆபரேட்டர்களும் தனியார் எம்.எஸ்.ஓக்களுக்கு மாறியுள்ளனர்.

இவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் கருணாநிதி தலையிட்டு, ஆபரேட்டர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். அரசு கேபிள் டிவி கழக அமைப்பில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அரசு கேபிள் டிவி கழகம் அழியும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

நல்ல டிஜிட்டல் தொழில்நுட்பம், சிறந்த கட்டமைப்புடன் கூடியதாக உள்ள அரசு கேபிள் டிவி கழகம் வாழ வேண்டும். அப்போதுதான் நாங்களும் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்றார்.

இதற்கிடையே அரசு கேபிள் டிவி கழகத்திடமிருந்து விரைவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அவை என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர்.

கடந்த ஆண்டே சென்னையில் அரசு கேபிள் டிவி கழக சேவை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகளே இல்லை.

சமீபத்தில்தான் சென்னையில் தனது சேவையை ஹாத்வே டேட்டாகாம் நிறுவனம் நிறுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்த நிறுவனம் 10 சசதவீத ஆபரேட்டர்களை தன் வசம் வைத்திருந்தது. இந்த நிறுவனத்திற்கும் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் இடையே கடும் போட்டியும் நிலவி வந்தது.

ஆனால் பல்வேறு காரணங்கள், நிர்ப்பந்தங்கள், பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தற்போது ஹாத்வே தனது சேவையை நிறுத்தி விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X