தேர்தல்: இடதுசாரிகள் திணறல்-நாளை முடிவு
சென்னை: தமிழகத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை முடிவெடுக்கவுள்ளன.
இன்று நடந்த இக்கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து நாளை முடிவெடுக்கப்படவுள்ளதாம்.
இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆனால், எந்தக் கூட்டணிக் கட்சியுடனும் ஆலோசிக்காமல் தனனிச்சையாக தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். இந்த உத்தரவை பாமக, மதிமுக ஆகியவை ஏற்றுக் கொண்டுவிட்டன.
ஆனால், கூட்டணியில் அதிருப்தியோடு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் இது குறித்து விவாதித்தே முடிவெடுப்போம் என்று கூறிவிட்டது. இதனால் ஜெயலலிதா சொல்வதை தட்டாமல் கேட்கும் இந்திய கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் இடதுசாரிகள் கூட்டணியை கட்டிக்காக்க மார்க்சிஸ்ட் எடுக்கும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்டுப்பட்டாக வேண்டிய நிலையில் உள்ளது.
நேற்று இது தொடர்பார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். சென்னை மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் என். வரதராஜன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இரு கட்சிகளும் மாநில செயற்குழுக் கூட்டங்களை தனித்தனியாக கூட்டி விவாதிப்பது எனவும், பின்னர் மீண்டும் இரு கட்சி தலைவர்களும் கூடி, கூட்டாக முடிவெடுப்பது என்றும் முடிவாகியுள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆகியவை இன்று காலை நடந்தன. ஆனால் அதில் இடைத் தேர்தலில் நிலைப்பாடு என்ன என்பது முடிவாகவில்லை.
இதையடுத்து நாளை திருச்சியில் மீண்டும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இடைத் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications