சென்னை மாநகராட்சியி்ல் பாமகவினர் மீது பாட்டில் வீச்சு
சென்னை: சென்னை கோயம்பேடு திருமங்கலீஸ்வரர் ஆலய நிலம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக, பாமக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது பாமக கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
அவை கூடியதும் பாமக கவுன்சிலர் ஜெயராமன் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அவர் கூறுகையில், கோயம்பேட்டில் 43 ஏக்கர் நிலம் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இதில் 14.63 ஏக்கர் நிலம் நத்தம் புறம்போக்கு நிலமாகும். 3.03 ஏக்கர் நிலம் திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது.
இந்த நிலத்துக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கி, கட்டிடம் கட்ட மாநகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நிலத்தை மீட்க வேண்டும் என்றார்.
அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி குறுக்கிட்டு, இந்த நிலம் சம்பந்தமாக அதிமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வந்தபோது நாங்கள் அதை எதிர்த்தோம். இப்போது சிஎம்டிஏ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அந்த திறந்தவெளி இடத்தை அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஜெயராமன் பேசுகையில் சில மேற்கோள்களை காட்டிப் பேச, குறுக்கிட்ட மேயர் சுப்பிரமணியன் அவர்கள் பேசியது, இவர்கள் பேசியது பற்றியெல்லாம் சொல்லாமல் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்றார்.
அப்போது ஜெயராமன் கூறிய சில கருத்துக்களுக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பாமக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவி்க்கவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது பாமக கவுன்சிலர்கள் மீது திடீரென ஒரு காலி தண்ணீர் பாட்டில் வந்து விழுந்தது. இதனையடுத்து பாமகவினர் எழுந்து நின்று தங்கள் பேச்சுரிமை மறுக்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்த நில விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது, திமுக கவுன்சிலர்களின் நடவடிக்கைகளை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிவிட்டு பாமக கவுன்சிலர்கள் வெளியேற முயன்றனர்.
அப்போது மேயர் சுப்பிரமணியன் குறுக்கிட்டு, ஒரு குற்றச்சாட்டை கூறிவிட்டு எங்களது விளக்கத்தை கேட்காமல் போனால் எப்படி? நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்றார். இதையடுத்து பாமக கவுன்சிலர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
அப்போது மேயர் கூறுகையில்,
இந்த நில விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்கு அமைச்சர் விரிவான பதிலை அளித்திருக்கிறார். சென்னை நகர எல்லைக்குள் நிலத்துக்கு அங்கீகாரம் வழங்குவது சிஎம்டிஏவின் கடமையாகும்.
கட்டிடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்குகிறது. இந்த நிகழ்வில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அடங்கியுள்ள கோயில் நிலம் குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும் அந்த நிலத்தில் 12 மீட்டர் சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமங்கலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.03 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்ப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications