கான்டினென்டல் மன்னிப்பு கேட்கவில்லை-கலாம்
டெல்லியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு நியூயார்க்குக்கு கலாம் பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கலாமை அசிங்கப்படுத்தியது அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்லைன்ஸ்.
இதுகுறித்து அரசு கமுக்கமாக இருந்து வந்தது. ஆனால் கலாம் அவமானப்படுத்தப்பட்ட தகவல் கசிந்ததும் நாடே அதிர்ந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து சுதாரித்த மத்திய அரசு இந்த சம்பவம் மன்னிக்க முடியாதது. இதுதொடர்பாக விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
இதையடுத்து சப்பைக் கட்டு விளக்கம் அளித்த கான்டினென்டல், பிரச்சினை பெரிதானதும், கலாமுக்கு நேர்ந்தது குறித்து மன்னிப்பு கேட்பதாக அறிவித்தது.
ஆனால் வெறுமனே சொல்லியதோடு நின்று விட்டது கான்டினென்டல் என்று தெரிய வந்துள்ளது. காரணம், மன்னிப்பு கேட்டு இதுவரை கலாமை அந்த நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளவில்லை, கடிதம் எதையும் அனுப்பவில்லை.
இதுகுறித்து கலாமிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு இதுவரை எந்த மன்னிப்பும் வரவில்லை என்று கூறினார் கலாம்.
இந்த சம்பவத்தை அவமானமாக உணருகிறீர்களா என்று கேட்டபோது, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார் கலாம்.
கான்டினென்டல் சமாளிப்பு..
இந் நிலையில் கான்டினென்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாம் டெல்லியில் இல்லாததால் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை. அவர் டெல்லி திரும்பியதும் எங்களது அதிகாரிகள் நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்போம் என்று கூறப்பட்டுள்ளது.